இணைய வழியில் தமிழ் மொழி புதிய பார்வை
ஜெ.அருள்இருதயஜெயந்தி
மேற்பார்வையாளர்
ஜெயராஜ்அன்னபாக்கியம்மகளிர், கல்லூரி(தன்னாட்சி)
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கொடைக்கானல்.
க.அமுதவள்ளி,
ஆய்வாளர்,
ஜெயராஜ்அன்னபாக்கியம்மகளிர்,
கல்லூரி(தன்னாட்சி)
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
கொடைக்கானல்.
ஆய்வுச் சுருக்கம்:
தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் தமிழ் மொழிப் பேசக்கூடிய உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க முடிகின்றது. மேலும் இதன் மூலம் உலகந்தழுவி வாழுகின்ற தமிழ் மக்கள் மட்டுமல்லாது பிற மொழி பேசும் மக்களும் தமிழ் மொழியை கற்பதற்கும், தமிழர்களின் வரலாறு, கலை,பண்பாடு உள்ளிட்ட வாழ்வியல் கூறுகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் இன்றைய இணையம் சிறப்பான பங்கு ஆற்றி வருகின்றது. இதற்கு இணையத்தில் தமிழ் மொழியை கற்பதற்கு தேவையான சில மாற்றங்கள் மற்றும் அணுகுமுறைகள் தோன்றி வளர்ந்து வருகின்றன.குறிப்பாக பாடப்புத்தகம் வாயிலாக மாணவர்களுக்குச் செய்யுள் மற்றும் இலக்கணம் கற்பதில் உள்ள சவாலை எதிர்கொள்ள நவீன கணிப்பொறி தொழில் நுட்பம் மிக இன்றியமையாததாக உள்ளது. வகுப்பறையில் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக செய்யுள் மற்றும் இலக்கணம் போன்ற தமிழ் பாடப் பகுதிகளை நேரடியாக காட்சிப்படுத்த முடிகின்றது. இதன் மூலம் தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் மிகவும் எளிதாகின்றது. அதைப் பற்றி இக்கட்டுரை விரிவாகப் பேச இருக்கின்றது.
குறியீட்டு சொற்கள் : இணைய தளம், கணிப்பொறி தொழில் நுட்பம், வாழ்வியற் கூறுகள்,தமிழ் மொழி
முன்னுரை :
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவவானினும்நனசிறந்தனவே” –
தமிழ்கற்பித்தல்பகுதி1 (2013),
என்ற புதுயுகக் கவிஞர் பாரதியார் கூறுவது போல உலக அளவில் மிக அதிகமான தொடக்கப் பள்ளிகளைக் கொண்ட நாடு நம் இந்தியா நாடு. உலக அளவில் அதிகமான இடைநிலைப் பள்ளிகளைக் கொண்ட நாடுகளில் 2-ம் இடத்தில் உள்ள நாடும் நம் இந்தியாவே. உலக அளவில் அதிக பல்லைகழக மாணவர்களைப் பெற்றுள்ள நாடுகளில் 4-ம் இடத்தில் உள்ள நாடும் நம் இந்தியாவே. இவ்வாறு கல்வித் துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாடு நம் இந்திய நாடே ஆகும்.
இந்தியக் கல்வி துறையின் கலங்கரை விளக்கமாக இன்று தமிழ்நாடு வளர்ந்துள்ளது.கல்வியின் வாயிலாக நம் நாட்டின் ஆண்களும் பெண்களும் ஒரு சேர எல்லாத் துறைகளிலும் சாதித்து வருகின்றனர். கல்வி என்பது “அள்ள அள்ளக் குறையாது வரும் அமுத சுரபி” என்பதனை உணர்ந்ததால் தான் இன்றும் நம் வாழ்க்கையோடு கல்வியும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.ஏனெனில் கொரனாதொற்றின் காரணமாக வழிபாட்டு கூடங்கள் உட்பட அனைத்தும் பின்னடைவை சந்தித்த சூழ்நிலையிலும் கல்வி மட்டும் இணைய வழியில் நடைபெற்றது. இதனோடு தமிழ் மொழியும் அதனுடைய பயன்பாடும் வளர்ச்சி பெற்றது. தமிழில் புலமைப் பெற்ற கல்வியாளர்கள் தங்களுடைய தனித்திறன் மூலமாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ‘’வினாடி வினா, கருத்தரங்கு மற்றும் செயலரங்கு” போன்றவற்றை நடத்தி உலகத்தில் உள்ள தமிழ் மொழி பற்றாளர்கள் மட்டுமல்லாது அனைவரையும் சிந்திக்க தூண்டினார்கள். உலகமே செயல்படாத நிலை இருந்தாலும் அறிவை செயல்பட வைத்தது போற்றுதற்குரியது. இவ்வாய்வு கட்டுரையில் இணைய வழியில் தமிழ் மொழியின் செயல்பாட்டையும் அதன் வளர்ச்சியையும் புதிய கண்ணோட்டோத்துடன் விரிவாக காணலாம்.
தமிழ்மொழியின் சிறப்பு:
இனிமைத் தமிழ்மொழி எமதுஎமக்-
கின்பந் தரும்படி வாய்த்த நல் அமுது
தமிழ் எங்களுயிர் என்பதாலேவெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவிமேலே’’-2
பாரதியார் கவிதைகள்( 1990),
தமிழின் பெருமையினை எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் அருந்தமிழ், நறுந்தமிழ்,பைந்தமிழ் என்பதோடு கணினித் தமிழ் என்ற சிறப்பும் தமிழுக்கு கிடைத்து உள்ளது எனலாம். அன்றிலிருந்து இன்று வரை மொழியைத் தெய்வமாக வழிபடும் மரபு தோன்றியதும்,தாய்மொழியாம் தமிழ்பால் மக்கள் கொண்டிருக்கும் அழியாக் காதலை வெளிப்படுத்துவதும் தமிழ் மொழி ஒன்றேயாகும்.எல்லோரையும் ஈர்த்த தமிழ் மொழி இலக்கியம் மட்டுமல்லாது கல்வியியலிலும் தனியிடம் பிடித்து வளர்ச்சி பெற்றுள்ளது. நாளும் தோன்றும் கல்வியியல் மாற்றங்களை ஏற்று எழிலுற இயங்கும் மொழியாகத் தமிழ் மொழித் திகழ்கின்றது. ஆசிரியர் கல்வியியலிலும் தமிழாசிரியர் கல்வி மாறுபட்ட தன்மையுடையது. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடப்பொருளை மட்டும் கற்பிக்கன்றனர்.ஆனால் தமிழாசிரியரோ பாடப்பொருள் வெளிப்படும் ஊடகமான மொழியை பயன்படுத்தும் திறனையும் அதை வளர்க்கும் முறைகளையும்,அதனுடைய அருமை பெருமைகளையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அவற்றுள் தகவல் தொழில் நுட்பத்தின் மிகச் சிறந்த ஊடகமான இணையத்திலும் தமிழ் மொழியின் சிறப்பும் ஒங்கி வளர்ந்து நிற்கின்றது என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
பழங்காலத்தில் தமிழ் கற்றல் :
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” 3 – திருவள்ளுவர் (1998)
என்ற திருக்குறளின் மூலம் கல்வியின் சிறப்பை நாம் உணர்ந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் நம் மூன்னோர்கள் பழங்காலத்தில் குருகுலம் மூலம் கல்வியை கற்றுக் கொடுத்தனர்.இதனை
“கோடல் மரபே கூறுங்காலைப்
பொழுதோடு சென்று வழிபடல் முனியான்
முன்னும் பின்னும் இரவினும் பகலினும்
அகலானாகி அன்போடு கெழீஇக்
குணத்தோடு பழகிக் குறிப்பின் வழி நின்று”4 நன்னூல்(1994)
என்னும் நூற்பாவின் வழி அறியலாம்.பின்னர் திண்ணைப் பள்ளிகள் மூலம் கல்வியைப் போதித்து வ ந்தனர். அதன் பின்னர் சங்கம் மற்றும் சங்க மருவியக் காலங்களில் கல்வியை போதிப்பதில் தமிழ்ச் சங்கங்கள் பெரும்பங்கு வகித்தன . இதனை
“உற்றுளி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே”5
புறநானூறு மூலமும் உரையும்(2010),
என்ற புறநானூற்று பாடல் மூலம் அறியலாகிறது. அதாவது நம் முன்னோர்கள் கல்வியை எப்படியாயினும் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆசிரியர் இல்லத்திற்கே சென்று குருவின் வார்த்தைக்குக் கீழ்படிந்து கல்வியை கற்றனர் என்பதை உணர்ந்து கொள்ளலாம். மேலும் கல்விக்கூடங்கள் பற்றியோ,கற்பித்தல் முறைகள் பற்றியோ சங்க இலக்கியங்களில் யாதொரு குறிப்பும் இடம் பெறவில்லை எனலாம்.இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் வேரூன்றத் தொடங்கியப் பின்னரே பள்ளிக்கூடங்கள் கல்வி போதிக்கும் இடங்களாக மாறின. கிறித்துவ மிஷினரிகளால் கல்வி அனைவருக்கும் பொதுவாகி, நாடு முழுவதும் பாடத் திட்டங்களுடன் ஒரு முறையானக் கல்வி போதிக்கப்பட்டது. காலத்திற்கும், தேவைக்கும் , அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் ஏற்ப கல்வித்துறை பல மாற்றங்களைப் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது.அதனை பற்றி இனி காணலாம்.
நவீன யுகமும் தமிழ் கற்றலும் :
கல்வியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக அமைகின்றது. அக்கல்வியால் மட்டுமே அறிவார்ந்த சமுதாயம் மலர்கின்றது எனலாம். கல்வி கற்கும் முறைகளில் காலந்தோறும் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
நேரடி வகுப்பறை நிகழ்வில் ஆசிரியரும் மாணவரும் இணைந்து கற்றல், கற்பித்தல் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இன்றைய சூழலில் கொரானாவின் காரணமாக இந்நிலை மாறி இணைய வழியில் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குப் புது வரவாக இன்று இணைய வழிக் கல்வி விளங்குகின்றது. எல்லா நிலைகளிலும் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளத் தூண்டுகோளாய் இணையம் விளங்குகின்றது.மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி பெரிதும் தேவையான ஒன்றாகின்றது.
அவற்றுள் திறன் பேசி (Smart Phone), மடிக்கணினி (Laptop), கணினி (Computer) முதலான தொழில்நுட்பக் கருவிகள் இன்றைய காலத்தில் கல்வி கற்கத் துணை செய்கின்றது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல வசதிகளோடு இணையத்தில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு வெப்கஸ் சந்திப்பு (webex meet) கூகுள் சந்திப்பு (Google Meet) ஜீம் (Zoom) மற்றும் குழு இணைப்பு(Team link) போன்ற பல இணைய வழிச் செயலிகள் அறிமுகமாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பப் பெரு வளர்ச்சியால் உலகமே ஒரு சிறிய குடைக்குள் அடங்கிவிட்டது எனலாம்.
இணைய வழியில் தமிழ் மொழிப் பயன்பாடு:
தமிழ் மொழிக் கல்வியை அரிச்சுவடி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பல்லூடகத்தின் (multimedia) மூலம் அசைவு படங்களாக ஒலி வடிவம்,ஒளி வடிவம் கொண்டு அமைக்கப் படுவதால் கேட்டல்,பேசுதல்,படித்தல், எழுதுதல் ஆகிய அடிப்படை மொழித்திறன்களை நம் தமிழ் மாணவர்களிடமும் தமிழ் மொழி அல்லாத பிற மொழிப் பேசும் மாணவர்களிடமும் எளிதாக வளர்க்க முடிகின்றது.
அண்டை நாட்டில் வாழும் பிறமொழி பேசக்கூடிய மற்ற மாணவர்களூம் தங்கள் மொழித் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை கீழ்க்காணும் வலையமைப்புகள் வழங்குகின்றன.அவையாவன
http://www.southasia.upenn.edu/tamil
http://www.tamil.net/projectmadurai
முகநூல்(face book), புலனம் (WhatsApp) படவிரி (InStagram) என்ற சமூக வலை ஊடகங்கள் தமிழாசிரியர் பயிற்சியில் தனக்கென ஓரிடம் பெற்று விளங்குகின்றது.ஏனெனில் தமிழ்ப் பண்பாடு, பாரம்பரியம், வாழ்வியல் போன்ற தகவல்களை மாணவர்களுக்கு எடுத்து செல்லும் மிகப்பெரிய ஊடகமாக இவையெல்லாம் விளங்குகின்றது.மேலும் மாணவர்களூக்குத் தேவையான தகவல்களைத் திரட்டவும், தம்முடைய நண்பர்களுக்கும் பொருள் பொதிந்த கருத்துக்களை அளித்து புதிய அறிவை கட்டமைக்கவும், புதிய பரிமாணத்தை உருவாக்கவும் வழிசெய்கின்றது.
இணையத்தில் போஸ்ட்ரஸ் என்ற மென்பொருள் மாணவர்கள் பேச்சுத் தமிழில் சரியாக பேசுவதற்கு உதவி செய்கின்றது.ஏனெனில் பதின்ம வயது மாணவர்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக செயல்பட்டு தம் கருத்துக்களை பலரிடம் தெரியப்படுத்துவதற்கும்,மற்றவர்களிடம் நேர்காணல் மூலம் கிடைத்த கருத்துக்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை முறையாக வழங்குவதற்கும் இன்றைய நவீன யுக இணையம் பெரும் பங்காற்றுகின்றது.
வாய்ஸ்த்ரெட் என்ற மென்பொருள் மூலம் இலக்கணம் மற்றும் செய்யுள் போன்ற தமிழ் பாடப்பகுதிகள் திரையில் படம் மற்றும் படக்காட்சியாக வெளிப்படுவதன் மூலம் அப்பாடக்கருத்துக்களை ஒலி மற்றும் ஒளி வழியே கற்றுக் கொள்ளவும்,பகிர்ந்து கொள்ளவும் பயன்படுகின்றது.
புகைப்படக் கதை என்பதின் மூலம் படத்திரட்டல்,கருத்துத் திரட்டல்,தேவையான படங்களை தெரிவு செய்தல்,படங்களுக்கான வாசகங்களை எழுதிக் குரல் தருதல், இணைய பொருத்தமாக இணைத்தல் போன்ற பலவற்றிற்கும் பயன்படுகின்றது.
விம்பாலைவ் என்பது ஒரு மென்பொருள். இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்குள் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே தொடர்பை நிகழ்த்தவும்,குழுக் கலந்துரை யாடலிற்கும், வாய்மொழிப் படைப்பிற்கும் மிகவும் அதிகமாக பயன்படுகின்றது
முடிவுரை:
“எளிய நடையில் தமிழ் நூல்கள் எழுதிடவும் வேண்டும்
இலக்கண நூல்கள் புதிதாக இயற்றுதல் வேண்டும்
வெளியுலகில் சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாம் கண்டு
தெளிவுறுத்தும் படங்களோடு சுவடியெல்லாம் செய்து
செந்தமிழை செழுந்தமிழாய் செய்திடவும் வேண்டும்”6
பாரதிதாசன் கவிதைகள் (2018),
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பொன்மொழிக்கேற்ப இன்றளவிலும் நம் தமிழ்மொழி எல்லாத் துறைகளிலும் செழுமை வாய்ந்த மொழியாகவே திகழ்கின்றது என்பதில் எள்ளவும் ஐயமில்லை. இவ்வாறு இணையத்தின் மூலம் தமிழ் மொழி பெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம்.
துணை நின்ற நூல்கள்:
- முனைவர்.பூ.தீனதயாள்-தமிழ்கற்பித்தல்பகுதி1(2013),கிருஸ்ணாபப்ளிகேஷன்ஸ், சென்னை (பக்-15)
- சி.சுப்பிரமணிய பாரதி-பாரதியார் கவிதைகள்( 1990),மணிவாசகர் பதிப்பகம் 8/7 சிங்கர் தெரு, பாரீமுனை, சென்னை
- திருவள்ளுவர்-திருக்குறள் (1998) மீனாட்சி புத்தக நிலையம்,திருச்சி(குறள்-392)
- பவணந்தி முனிவர்-நன்னூல்(1994) முல்லை நிலையம்,திருச்சி நூற்பா:40
- புலியூர்க்கேசிகன்-புறநானூறு மூலமும் உரையும்(2010), சாரதா பதிப்பகம்
- (பாடல் எண்:183)
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் – பாரதிதாசன் கவிதைகள் (2018), கற்பக புத்தகாலயம்,சென்னை.