“தமிழி” தமிழ் நிரலாக்கப் போட்டி!


தமிழ் மொழிநுட்பத்தில் மாணவர்களையும்  தொழில் முனைவோர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஸ்டார்ட் அப்.டி.என், தமிழ் இணையக் கல்விக் கழகம், திரள், வாணி, அக்ரி சக்தி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தமிழ் மொழி நிரலாக்கப்போட்டி ஒன்றை, தமிழி என்ற பெயரில் நடத்தினர்.போட்டி சிறப்புடன் நடைபெற, பத்திரிகை டாட் காம், அறிஞர் குறுஞ்செயலி , valari.ai,தமிழ் அநிதம், உடுமலைபுக்ஸ், கோட்ரேஸ், The Center of Internet Society  போன்ற தமிழ் மொழிச் சார்ந்த கணினி நிறுவனங்களும் பல தனி நபர்களும் பல உதவிகளைச் செய்தனர்.

ஊடகம், பதிப்புத்துறை, கேளிக்கை, விளையாட்டு, சந்தைப்படுத்தல், சுற்றுலா, கல்வி, ஆராய்ச்சி& மேம்பாடு, தமிழ் விக்கிப்பீடியா போன்ற முக்கியமானத் தலைப்புகளில் தமிழ் மொழிக்குத் தேவையான  நிரலாக்கங்களை ஊக்குவிக்கும் விதமாக இப்போட்டி அறிவிக்கப்பட்டது.

தமிழ்நிரலாக்கத்தில் புத்தாக்கத் தொழில் முனைவோருக்கென இரு பரிசுகளும் மாணவர்களுக்கென, அவர்களின் பயில்தொழில் முனைப்பை தமிழ் மொழி நிரலாக்கத்தில் ஊக்கப்படுத்தும் விதமாக மூன்று பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.

2025ம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 20ம் தேதி இந்தப் போட்டிக்கான அறிவுப்புகள் அறிவிக்கப்பட்டு போட்டித் தொடங்கியது. பங்கேற்பாளர்களுக்கு மார்ச் 31ம் தேதி இணைய வழி பயிற்சியும், மார்ச் 22ம் தேதி முதற்கட்டப் பரிசோதனையும் நடந்தது.முதற்கட்டப் பரிசோதனையில் தேர்வானப் போட்டியாளர்களுக்கு மதுரையில்  நேரடிப் பயிற்சி மார்ச் 26ம் தேதி நடந்தது.

போட்டியின் அரையிறுதிச்சுற்று ஏப்பிரல் 13ம் தேதியும்  இறுதிப் போட்டி மே மாதம் 1ம் தேதியும் நடந்தது. 142 விண்ணப்பங்கள் போட்டிக்காக வந்ததில் 24 அணிகள் இறுதிப் போட்டிக்குத் தயாராகின.

போட்டி நிரலாக்கங்களைச்  சீர் தூக்க மொத்தம் 16 குழுக்கள் இருந்தன.ஒவ்வொரு  கட்டத்திலும் தமிழ் கணினியாளர்கள் நடுவர்களாகவும் வழிகாட்டிகளாகவும்இப்பதினாறு குழுக்களில் தன்னார்வப்பணி செய்து போட்டியாளர்களை நல்வழிப் படுத்தினர்.

தேசிய தகவலியல் மைய மேனாள் துணை இயக்குநர்,முனைவர் இ.இனியநேரு, முனைவர் ல. ஷோபா, மு. மயூரன், அருள் குமரன், முகிலன் முருகன், கலீல் ஜாகீர், சைபர் சிம்மன், விக்னேஷ் அண்ணாமலை, சத்தியா, சதீஷ் குமார், செந்தில் நாயகம், கார்த்திகேயன், பிரபாகர் முருகன், அருண் குமார் ஆகிய பலரும் நடுவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் செயல்பட்டனர். ராஜு கந்தசாமி, வெங்கடேஷ், செண்பகவடிவு, கலைச்செல்வி  சுகந்தி உள்ளிட்ட பலர் வழிகாட்டிகளாக மட்டுமேச் செயல்பட்டனர்.

புதுத் தொழில்முனைவோருக்கான முதல் பரிசைச் சிவகாசி ஸ்டாண்டர்ட் ஃபயர்வொர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியும் மியூசிக்களி என்ற நிறுவனமும்  இணைந்து பெற்றன. அவர்களுக்குப் பரிசுத் தொகையாக ரூ 50,000/- கொடுக்கப்பட்டது. இரண்டாம் பரிசினை மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியும் ஆரியல் லேப்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து பெற்றன. அவர்கள் பெற்றுக் கொண்ட பரிசின் மதிப்பு ரூ 25,000/-.

மாணவர்களுக்கான பயில்  தொழில் போட்டியில் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியின்Gen-Squad அணி பெற்ற முதல் பரிசின் மதிப்பு ரூ 20,000/- கோவை காருண்யா தொழில்நுட்ப அறிவியல் கல்லூரியின் Tamil Pasanga அணி  பெற்ற இரண்டாம் பரிசின் மதிப்பு ரூ 15,000/-. ரூ 10,000/- மூன்றாம் பரிசைத் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் Tech Karikala  அணி தட்டிச் சென்றது.இப்பரிசுகள் தவிர ஐந்து அணியினர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர்.

 தமிழி தமிழ் நிரலாக்கப் போட்டியில் மலேசியா, ஜப்பான், கர்நாடகா, ஆந்திரா ஆகிய இடங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து  கொண்டது  குறிப்பிடத்தக்கது.  அக்ரி சக்தி செல்வமுரளி அவர்களும், வாணி பிழைத்திருத்தி நீச்சல்காரன் அவர்களும்  இப்போட்டி  சிறப்பாக நடக்கத் தங்களின்  முயற்சி, உழைப்பு, நேரம் ஆகியவற்றைச் செலவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   அவர்களின் உழைப்புத் தங்களைப் போலத் தமிழ் கணிமைக்காகக் சிந்திக்கும் மாணவ நிரலர்களை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

முதல் பரிசு பெற்றசிவகாசி S.F.R கல்லூரியின் கணினித்துறையும் தமிழ் துறையும் தமிழ் அநிதத்தோடு இணைந்து கல்வித் தொழில்நுட்பம் சார்ந்து பல பயிலரங்களையும் கல்வி மாநாட்டையும் நடத்திக் கொடுத்துள்ளது.தமிழ் அநிதத்தின் மற்றக் கல்விமாநாடுகளிலும் ஆர்வமாகக் கலந்து கொண்டுள்ளது.இக்கல்லூரிதமிழ்த் துறை பேராசிரியை விஜயப் பிரியா கொரானா காலத்தில்தமிழ் அநிதம் அளித்த 7 நாள் அடிப்படைக் கணினி பயிற்சியில் கலந்து கொண்டு முதல் முதலாக நிரலாக்கம் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் அநிதம்  இப்போட்டி நடப்பதற்கு உறுதுணையாக இருந்திருந்தாலும், அது போட்டியின் எந்த நிகழ்விலும் பங்கேற்க இயலவில்லை என்ற காரணத்தால்  இச்செய்தித் தொகுப்பு  இரண்டாம் கட்ட மூலச்செய்திகளின் தொகுப்பாக அமைகிறது.