இணையத்தில் நாட்டுப்புறத் தெய்வங்கள்

திருமதி க.பொற்கொடி & நெறியாளர்:முனைவர் மா.பத்மபிரியா

பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்

தி ஸ்டாண்டர்ட்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),

சிவகாசி.

Summary

ஒரு நாட்டின் முதுகெலும்பாக செயல்படுபவை கிராமங்கள். கிராம மக்களின் நம்பிக்கையாக செயல்படுபவை நாட்டார் தெய்வங்கள். மக்கள் தங்கள் வாழ்க்கையில் அச்சம் தரும் இயற்கையின் அதீதக் கூறுகளைக் கண்டு பயப்பட ஆரம்பித்தனர். அவற்றிலிருந்து தம்மை காப்பதற்காக தன்னை மீறிய ஒரு சக்தி உலகில் வாழ்வதாக நம்பிக்கை கொண்டனர். அந்த சக்திக்கு மனிதஉருவம் தந்து நாட்டார் தெய்வங்களாக வணங்குகின்றனர். முக்கியமாக கிராம மக்களின் வாழ்வாதாரங்களின் நம்பிக்கைக் கூறுகளாக விளங்குபவை இத்தகைய தெய்வங்கள் ஆகும். இத்தெய்வங்கள் அவர்களின் மூதாதைகளின் வழிபாடாக,குலத்தின் முன்னோனாக,கிராமத்தின் காவல் தெய்வங்களாக,எல்லைச்சாமியாக பல்வேறு பெயரிட்டு நாட்டுப்புறத் தெய்வங்கள் என்று அழைக்கின்றோம். இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவையாக கணினியும் அதன் சார்புடைய இணையமும் செயல்பட்டு வருகிறது. அத்தகைய இணையத்தில் மண்ணும் தெய்வீகமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்கள் பயனுறும் வண்ணம் நாட்டுப்புற தெய்வங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் இடம்பெறும் விதங்களை இக்கட்டுரையில் காண்போம்.

நாட்டுப்புறத் தெய்வங்கள் 
கிராமங்கள் இல்லாத உலகமே இல்லை. தெய்வங்கள் இல்லாத கிராமமே இல்லை. “கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்;டாம் என்பது ஒரு முதுமை மொழி - முழுமை மொழி. ஆனால் இன்று கோயிலில்லா ஊர்களே இல்லை என்பது மட்டுமல்ல, குடியில்லா ஊர்களில்கூட கோவில்கள் இருக்கின்றன”1 என்ற வரிகள் வாயிலாக கோயில்களின் இன்றியமையாமையை டாக்டர் சு.சண்முகசுந்தரம் அவர்களின் நாட்டுப்புற இயல் என்ற நூலின் வாயிலாக அறிய முடிகிறது. ஒரு நாட்டின் உயிர்நாடியாக செயல்படும் இக்கிராமங்களில் வாழும் மக்கள் தங்களுடைய மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகளின் அடிப்படை காரணியாக தெய்வங்களை நம்புகின்றனர். தங்கள் வாழ்வில் மகிழ்ச்சி அடைந்தால் தெய்வத்திற்கு நன்றி செலுத்தியும், துன்பம் ஏற்பட்டால் தெய்வத்திடம் முறையிட்டும் வாழ்ந்து வருகின்றனர். “நாட்டார் தெய்வங்கள் ‘தத்துவ விசாரங்களிலே’ நொறுங்கிப் போகுமளவு மெலிதானவையல்ல. அவற்றின் வேர்கள் வலிமையானவை”2 என்ற தொ.ப வின் கருத்தின்படி நாட்டுப்புறத்தெய்வ வழிபாட்டின் ஆழத்தை அறியலாம். மக்களுடன் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த முன்னோர்களே பெரும்பாலும் நாட்டுப்புறத் தெய்வங்களாக வழிபடப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கணக்கில் அடங்காத நாட்டுப்புறத்தெய்வங்கள் காணப்படுகின்றன. இத்தகைய “நாட்டுப்புறத்தெய்வங்களை,
  • ஊர் தெய்வங்கள் 
  • •இன தெய்வங்கள் 
  • குல தெய்வங்கள் 
  • மாலை தெய்வங்கள் 
  • சமாதி தெய்வங்கள் 
  • துணை தெய்வங்கள் 
என்று ஆறு வகையாக பகுக்கிறார் டாக்டர் துளசி ராமசாமி” இணைத்திலும் இத்தகைய பாகுபாட்டின் அடிப்படையில் நாட்டார் தெய்வங்களின் வரலாறும் வழிபாட்டுமுறைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இணையம்:
மனிதன் நாகரீகமானவனாய் வாழத் தொடங்கியதிலிருந்து எண்ணற்ற கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினான். அவற்றில் முக்கிய கண்டுபிடிப்பு கணினி. மனிதனால் உருவாக்கப்பட்ட எண்ணற்ற அரிய நூல்களை சேகரிக்கும் கலனாகக் கணினி பயன்படுத்தப்பட்டது. இத்தகைய கணினிகளை வெறும் சேமிப்பகமாக மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்துத் தரவுகளையும் மக்கள் இருக்கும் ,டங்களிலேயே கொண்டு சேர்க்கும் கருவியாகப் பயன்படுத்தினர். அத்தகைய நுட்பத்திற்கு ,ணையம் என்று பெயரிடப்பட்டது. இணையம் என்றால் உலகில் உள்ள தரவுகளை நுட்பமாக ஆய்ந்து பதிவு செய்யும் தளம் ஆகும். கல்வி, வரலாறு, பொழுதுபோக்கு, பொருளாதாரம், சமூகநிலை,  சமயம் உள்ளிட்ட மக்கள் விரும்பும் அனைத்துத் துறை சார்ந்த தகவல்களையும் இணையத்தின் வாயிலாகப் பெற்றுக் கொள்ள முடியும். 

இணையத்தின் பயன்பாடு: 
மக்களின் இயல்பான வாழ்க்கையில் ஒருங்கிணைந்த ஒன்றாக இன்று இணையம்மாறிவிட்டது. இணையத்தில் உள்ள மின்னஞ்சலானது வெறும் தகவலை மட்டும் சுமந்து செல்வதோடு இல்லாமல் தகவல் பரிமாற்றத்திற்கும் பணப் பரிமாற்றத்திற்கும் காணொளிகள், புகைப்படங்கள், செய்திகளைச் சேகரிக்கும் நினைவகங்களாகவும் பயன்படுகிறது. மேலும்
  • Google 
  • Bing 
  • Yahoo 
  • Duck Duck Go 
  • Aol Search 
  • Start Page 
  • Yandex
உள்ளிட்ட எண்ணற்றத் தேடு பொறிகளும் (search engine) இணையத்தில் காணப்படுகின்றன. பெரும்பாலான மக்களால் Google என்ற தேடுபொறியே பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய Google தேடுபொறியில் நாட்டுப்புற தெய்வங்கள் குறித்த தகவல்கள் எந்தெந்த வகையில் இடம் பெற்றுள்ளன என்பதை காண்போம். 

உலாவியில் நாட்டுப்புறத் தெய்வங்கள்: 
தமிழகம் முழுவதும் கணக்கில் அடங்காத எண்ணற்ற நாட்டுப்புறத் தெய்வங்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரலாறும் வழிபாடும் ஒவ்வொரு இனக்குழு மக்களைச் சார்ந்தும், அவர்தம் வாழ்விடங்களைச் சார்ந்தும் மாறுபடுகின்றது. நாட்டுப்புற தெய்வங்கள் வாழும் இடங்கள் வழிபடும் முறைகள் அவற்றின் வரலாறு உள்ளிட்ட எண்ணற்ற தகவல்கள் இணையங்களில் பதிவு செய்யப்படுவதன் மூலமாக மக்கள் எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு இணையத்தில் பதிவு செய்யப்பட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் குறித்த தகவல்களை பின்வரும் சில வலைதளங்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். 

விக்கிப்பீடியா 
விக்கிப்பீடியா என்பது ஒரு இலவச இணையவழி கலைக்களஞ்சியம் ஆகும். “2001 ஆம் ஆண்டு ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் விக்கிப்பீடியா உருவாக்கப்பட்டது.”4 இத்தளம் ஒரு இலவச அணுகு தளம் ஆகும். எந்தத் தரவுகளைத் தேடினும் அந்தத் தரவுகளை முதன்மையாக வழங்கக்கூடிய தளமாக விக்கிபீடியா செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் நாட்டுப்புறத் தெய்வங்கள் குறித்த பல நுட்பமான தகவல்களையும், அதன் வகைப்பாடு மற்றும் பல எண்ணற்ற கிராமங்களைச் சேர்ந்த தெய்வங்களின் வரலாறு மற்றும் வழிபாடு குறித்த தகவல்களையும் தெரிவிக்கும் முதன்மையான தளம் விக்கிபீடியா ஆகும்.இணையத்தில் கீழ்க்கண்ட தளத்தை சொடுக்கினால் அறியலாம்.

நாட்டுப்புறத்_தெய்வங்கள் :
நாட்டுப்புறத்தெய்வங்களைப் பற்றிய விளக்கங்கள் மட்டுமின்றி நாட்டுப்புற ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள் மற்றும் காவல் தெய்வங்களின் உடைய பட்டியலையும் மிகச் சிறப்பாக விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான மக்களால் கொண்டாடப்படுகின்ற நாட்டுப்புறத்தெய்வங்களான இருக்கன்குடி மாரியம்மன், மாசாணி அம்மன், கருப்பசாமி, சுடலைமாடசாமி, நல்லதங்காள் கோயில் உள்ளிட்ட எண்ணற்ற கோயில்களினுடைய சிறப்புகளையும் வரலாற்றையும் வழிபாடுகளையும் விக்கிபீடியாவின் வாயிலாக அறிய முடிகின்றது. இணையத்தில் விக்கிபீடியா வழியாக கீழ்க்கண்ட தளத்தை சொடுக்கினால் அறியலாம்.


இணைய நாளிதழ்களில் நாட்டார் தெய்வங்கள்:
நவீனமயமான இவ்வுலகில் நாளிதழ்களும் இணையத்தில் நாட்டுப்புற தெய்வங்கள் குறித்த தகவல்களை பதிவு செய்தில் முக்கிய இடம் பெறுகின்றன. நாளிதழ்கள் என்பவை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கக்கூடிய செய்திகளை இதழ்களாக மக்களுக்கு கொண்டு சேர்த்த பணிகளைச் செய்து வந்தன. ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை பொதுவாக கூறி வந்த இந்த நாளிதழ்கள் இக்காலகட்டத்தில்  நாட்டுப்புற தெய்வங்கள் குறித்தத் தகவல்களை அந்தந்த இடங்களுக்கே சென்று சேகரித்து வருகின்றன. அவ்வாறு சேகரித்த தகவல்களை இணையத்தில் தமது வலையதள பக்கத்தில் வெளியீடு செய்கின்றன. தினமலர், விகடன் மாலைமலர், தினகரன், தினத்தந்தி, தினமணி உள்ளிட்ட நாளிதழ்கள் தத்தமக்குரிய வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளன. உதாரணமாக இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வரலாறு மற்றும் வழிபாடு குறித்த தகவல்களை தினமலர்5, விகடன் மாலைமலர், தினகரன், தினத்தந்தி, தினமணி உள்ளிட்ட வலைதளங்களில் காணமுடிகிறது. மேலும் The Times of India இன்று நாளிதழின் ஒரு பகுதியாக சமயம் என்ற வலைதளத்தில் சில நாட்டுப்புற தெய்வங்களின் வழிபாட்டுத் தகவல்களை அறிய முடிகின்றது. 

தமிழ் இணையக் கல்விக் கழகம் 
தமிழ் மக்களின் எண்ணற்ற தகவல்களை தொகுத்து வெளியிட்டு வரும் முக்கிய தளமாக தமிழ் இணைய கல்விக் கழகம் செயல்பட்டு வருகிறது. இணையத்தில் பலதரப்பட்ட மக்களின் தமிழ் சார்ந்த தேடல்களுக்கு விடையளிக்கும் விதமாய் இவ்வலைதளம் செயல்பட்டு வருகிறது6. நாட்டுப்புற தெய்வங்களின் வரலாறு குறித்த தகவல்கள் மற்றும் நாட்டுப்புற தெய்வங்கள் தொடர்பான நூல்களையும் இத்தளத்தின் வழி அறிய முடிகின்றது. Tamilvu.org என்ற வலை பக்கத்தின் வாயிலாக நாட்டுப்புற தெய்வங்கள் குறித்தத் தகவல்களைத் தேடும்பொழுது சிறு தெய்வங்களே நாட்டுப்புறத் தெய்வங்கள் என்று அழைக்கப்படுகின்றன என்ற தகவலையும், நாட்டுப்புறத் தெய்வங்களின் வகைகள், கோயில் அமைப்பு, வழிபாட்டு முறைகள் குறித்தத் தகவல்களையும் அறிய முடிகின்றது. மேலும் இவ்வலைத்தளத்தின் மற்றொரு பகுதியாக தமிழ் இணைய நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்நூலத்திலும் நாட்டுப்புறத்தெய்வங்கள் தொடர்பான எண்ணற்ற நூல்களை வாசிக்க முடிகின்றது. 

இணையத்தில் தெய்வீகம்: 
“தெய்வீகம் என்னும் வலைத்தளம் தனிநபர் ஒருவரின் வலைத்தளம் ஆகும். இவ்வலைப்பக்கத்தில் ஆன்மீகம் தொடர்பான கட்டுரைகளையும் கருத்துக்களையும் காண முடிகின்றது”7. நாட்டுப்புறத் தெய்வங்களான கருப்பசாமி, சுடலைமாடன், அய்யனார், ராக்காச்சியம்மன், பேச்சியம்மன் உள்ளிட்ட சில தெய்வங்களின் கதைகளும், இத்தெய்வ வழிபாட்டில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும் இத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


கீற்று:
தமிழ் சார்ந்த செம்மையான கருத்துக்களை சரியான முறையில் வழங்கக்கூடியத்தளம் கீற்று என்னும் இவ்வலைத்தளம் ஆகும். “தமிழ் தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், ஆன்மீக சிந்தனைகள், சுற்றிதழ்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்தக் கருத்துக்கள் இத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன”8. நாட்டுப்புறத் தெய்வங்களான கருப்பசாமி, சுடலை மாடன், மாரியம்மன் மற்றும் அய்யனார் உள்ளிட்ட தெய்வங்களின் வழிபாடுகள் தமிழக முழுவதும் இடம்பெறும் விதம் குறித்து தனித்தனிக் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளது.  

யாழ்:
யாழ் என்ற வலைத்தளமும் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான தளமாகும் இத்தளத்திலும் ஆன்மிகம் தொடர்பான தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறத்தெய்வங்கள் யார்? அவர்களை வழிபாடு செய்யும் விதங்கள் யாவை? உள்ளிட்ட வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாக இப்பக்கம் செயல்பட்டு வருகிறது. நாட்டுப்புறத்தெய்வங்களின் வரலாற்றை கட்டுரை வடிவத்தில் வெளியிட்டுள்ளது.

வலையொளியில் நாட்டுப்புறத் தெய்வங்கள்:
படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில் வலையொளி (YouTube) செயல்பட்டு வருகிறது. நாட்டுப்புறத்தெய்வங்களின் கதைகளையும், தலவரலாற்றையும், வழிபாட்டையும் புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் வெளியீடு செய்வதால் அனைத்துத்தரப்பட்ட மக்களுக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாடும் நாட்டுப்புறத் தெய்வங்களும், கழுகுப்பார்வை, Swami vivekanada Book Centre Madurai உள்ளிட்ட வலையொளி பக்கங்களில் நாட்டுப்புறத் தெய்வங்கள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 

பிற ஆய்விதழ்கள்:
  • தமிழுக்கான பிற முக்கியமான இணையஆய்விதழ்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
  • பாண்டியன் கோவில் கலைகள் தமிழ் ஆய்விதழ் https://pandianeducationaltrust.com/
  • KALANJIYAM - INTERNATIONAL JOURNAL OF TAMIL STUDIES (eISSN: 2456-5148) https://ngmtamil.in/
  • International journal of Tamil language and Literary  journal https://ijtlls.com/
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்  தமிழியல் https://ulakaththamizh.in/journal
  • Shanlax International Journal of Tamil Research https://shanlaxjournals.in/journals/index.php/tamil
  • Indian Journal of Tamil https://journals.asianresassoc.org/index.php/ijot


ஆய்வு மாணவர்கள் இணையத்தரவுகளை பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள்:
நாட்டார் வழிபாடுகள் பற்றிய இணையதளங்களை கல்விசார்புடையன, தனிநபர் பதிவுகள் என்று பகுத்தறியலாம். விக்கிப்பீடியா, தமிழ் இணையக் கல்விக் கழகம்,இணையநாளிதழ்கள், வலையொளி (YouTube)  இதனை போன்ற ஏனைய இணையதளங்களில் இடம்பெறும் செய்திகள் ஆய்வாளர்களுக்குப் பயன்பாடுடையதாக இருந்தாலும் ஆய்வாளர்கள் இத்தளங்களில் பதிவிடப்படும் தரவுகளைப் பகுத்தறிதல் சாலச்சிறந்தது. ஏனெனில், “விக்கிப்பீடியா:பொதுவான பொறுப்புத் துறப்புகள்” என்ற அறிவிப்புடன் தான் இணையத்தரவுகளை உள்ளிடுகின்றன என்பதனை ஆய்வுமாணவர்கள் கவனிக்க வேண்டும். “விக்கிப்பீடியா, இங்கே காணப்படும் தகவல்களின் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தாது. எந்தவொரு கட்டுரையின் உள்ளடக்கமும் யாராலோ சமீபத்தில் மாற்றப்பட்டு, அழிக்கப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம்.”9 என்று அறிவிப்பு செய்துள்ளது. எத்தகைய தரவுகளாக இருந்தாலும் உண்மையைப் பரிசோதித்தல் ஆய்வுக்கு அவசியம் என்றே அறிஞர்கள் கருதுகின்றனர். “ஆய்தல்,ஆராய்தல் ஆகிய சொற்கள் எடுத்துக்கொண்ட பொருள் பற்றிய “உண்மையை” அல்லது “மெய்ம்மையை” அறிவதற்காகச் செய்யும் வினையைக் குறிப்பிடுவனவாகும். “ஆய்வு” சமயத்துறையிலும் நடக்கிறது.அறிவியல் துறையிலும் நடக்கிறது.”10 சமயத்துறையோ,அறிவியல் துறையோ உண்மையை அறிதல் ஆய்வாகும்.அவ்வகையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் இணையத்தரவுகளை பின்வரும் வழிமுறைகளில் பரிசோதிக்கலாம். 
  • முதலாவதாக,நாட்டார் தெய்வங்களை ஆவணப்படுத்தும் இத்தளங்கள் உரிய நூல் ஆதாரங்களை பின்னிணைத்திருக்கின்றனவா என்று அறிதல் வேண்டும்.
  • வலையொளி (YouTube)  தளத்தில் உள்ள தனிநபர் பதிவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது.தனிநபர்கள் தங்களின் சொந்த விருப்பங்களையே மிகுதியாக பதிவிடுகின்றனர்.இவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது ஆய்ந்தறிதல் அவசியமாகும்.
  • தமிழ் இணையக் கல்விக் கழகம் தரும் தரவுகள் நாட்டார் வழக்காற்றியல் நூல்களாக, ஆய்வுக்கட்டுரைகளாக உள்ளிடப்பட்டுள்ளதால்,அவை சான்றாதாரங்களை நிரல்படுத்தியே வெளியிடுகின்றன. ஆதலால்,அவை ஆய்வு மாணவர்களுக்குப் பயனுள்ள பகுதியாக அமைகிறது. 
  • இணையநாளிதழ்களில் பதிவிடப்படும் செய்திகள் அந்தந்த கிராமத்தினரின் நேரடி பேட்டிகளாக அமைவதும்,சில கட்டுக்கதைகளாக அமைவதும் உண்டு.இவற்றின் நம்பகத்தன்மையும் ஆய்ந்தறிதல் அவசியம்.
  • நாட்டுப்பறத் தெய்வங்களை கொரானா போன்ற பேரிடர் காலங்களில் களத்திற்குச் சென்று ஆய்வு செய்ய இயலாதவர்களுக்கு இணையதளங்களே பேருதவியாக அமைந்தன. ஆய்வுமாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை இணைய இதழ்கள் பதிவிடுவதும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கின்றன. 
  • இணையஇதழ்களானமுத்துக்கமலம் (https://www.muthukamalam.com/essay/main.html#google_vignette) 
  • பதிவுகள் (https://www.geotamil.co.in/search?q=pathivugal)  போன்றன கோயில் ஆய்வு சார்ந்த கட்டுரைகளைப் பதிவிட்டுள்ளன. குறிப்பாக முத்துக்கமலம் இணைய இதழில் ஆன்மீகம், ஜோதிடம்,பொதுக்கட்டுரைகள் என்ற பகுதிகள் ஆய்வுமாணவர்களுக்குப் பயனுறும் வண்ணம் அமைந்துள்ளது.
  • உலாவியில்  தமிழ் ஆய்விதழ்கள் என்று தேடினால் பின்வரும் ஆய்விதழ்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் தரவுகள் சான்றாதாரங்களுடன் இடம்பெறுவது நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கு உதவுகின்றது எனலாம்.

முடிவுரை:
இன்றைய நவீன வாழ்வியலில் தொழில்நுட்ப வளர்ச்சியால் சொந்த மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்தவர்களுக்கு மண்ணும் மக்களும் கொண்டுள்ள இறைநம்பிக்கை குறித்த பதிவுகளை அறிவதற்கு இணையதளங்கள் பேருதவியாக அமைகின்றன. விக்கிப்பீடியா, வலையொளி (YouTube) இரு தளங்களீலும் விவரங்கள் அதிகமாகச் கிடைத்தாலும் அவை  நாட்டார் தெய்வங்களைப் பற்றிய ஆராய்ச்சியின்  தொடக்கப் புள்ளியாக இருக்க வேன்டுமே தவிர அவற்றில் கிடைக்கும் விவரங்களை ஆராய்ச்சியின் சான்றாகப் பயன்படுத்துவது பிழையான ஆய்விற்கு வழி வகுக்கக் கூடும்.எனவே நம்பகத்தன்மை அறிந்து பயன்படுத்துதல் வேண்டும்.  ஆனால், தமிழ் இணையக் கல்விக் கழகம்,இணையநாளிதழ்கள், ஆகியவற்றில் இடம்பெறும் இணையத்தரவுகளை ஆய்வாளர்கள் நம்பகத்தன்மையோடு பயன்படுத்தலாம். ஏன் எனில் அவை பேராசிரியர்களாலும் இதழ் ஆசிரியர்களாலும் சரி பார்க்கப்பட்டவை.இணைய ஆய்விதழ்கள் ஆய்வுமாணவர்களின் ஆய்வு வளர்ச்சிக்கு உதவியாக அமைகின்றன. ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை பதிவிடுவதற்கு இத்தளங்கள் உறுதுணையாக அமைகின்றன எனலாம்.

சில அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள் நாட்டுப்புறத்து மக்களின் தெய்வ வழிபாடுகளை உண்மைத்தன்மையுடன் பதிவிடுகின்றன.  ஆயினும், இறைநம்பிக்கை உடையவர்களின் மனநிலையைப் பயன்படுத்தி நம்பகத்தன்மையற்ற தரவுகளும் பதிவிடப்படுவதாக அறிஞர்கள் கருத்துரைக்கின்றனர்.வருங்கால சந்ததியினர் குறிப்பாக, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் இதனை அறிந்து இணையத்தரவுகளைப் பயன்படுத்துதல் அவசியமாகும். ஏனெனில் சிற்சில கட்டுக்கதைகளாகக் கூட அமைவதுண்டு. இதனால் இணையத்தரவுகளின் நம்பகத்தன்மையை ஆய்ந்து அறிவது ஆய்வாளர்களின் பணியாகும். ஆயினும்,தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் உள்ள நாட்டுப்புறத்தெய்வங்களை இணையதளங்களில் உள்ள வலைதளத்திலோ, வலையொளியிலோ, படவரியிலோ, ஒலிப்புத்தகத்திலோ இத்தளங்களே பாதுகாக்கின்றன. இதனை,. இணையவளர்ச்சியின் சாதனை எனலாம்.


சான்றெண் விளக்கம்:
  1. டாக்டர் சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புறஇயல், ப.160
  2. தொ.பரமசிவன், தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும், ப.69
  3. டாக்டர் சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புறஇயல், ப.161
  4. https:// ta.wikipedia.org
  5. https:// temple.dinamalar.com
  6. https:// www.tamilvu.org
  7. https://dheivegam.com
  8. https://keetru.com
  9. https://ta.wikipedia.org/ wiki/விக்கிப்பீடியா:பொதுவான_பொறுப்புத்_துறப்புகள்
  10. ச.வே.சுப்பிரமணியன்(ப.ஆ) ,ஆராய்ச்சி நெறிமுறைகள், ப.53.
  11. "Noolulagam » நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் – பேரா.சு.சண்முகசுந்தரம்". Archived from the original on 2017-11-15. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.


Author
கட்டுரையாளர்

திருமதி க.பொற்கொடி & நெறியாளர்:முனைவர் மா.பத்மபிரியா

பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்

தி ஸ்டாண்டர்ட்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),

சிவகாசி.